top of page

தூவானத்தின் தூறல்கள்...

Updated: Nov 14, 2018


தொடர்ந்து மூன்றாவது வருடமாக மூணாறு பயணம் செல்ல நேரிட்டது.


முதல் முறை, புதிதாய் வாங்கிய மோட்டார் சைக்கிளில் 2016 ஆண்டு, பக்கத்து வீட்டு தம்பியுடன் சென்று வந்தேன். இரெண்டாம் முறை அதே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்று வந்தேன்.


இம்முறை 12ஆண்டுக்குப்பிறகு மூணாறில் குறிஞ்சி பூ பூப்பதால், குறிஞ்சி பூ போர்த்திய மலைகளின் அழகை, எப்படியாவது கண்டு ரசித்து புகைப்படம் எடுக்க திட்டம் தீட்டினேன்.


ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறிஞ்சி பூ பூத்தாலும், மூணாறில் மட்டுமே ஏழு மலைகளில் பூத்து, குறிஞ்சி நிலம் குறிஞ்சியால் அலங்கரிக்கபடுகிறது. இரெண்டாண்டுக்கு முன்னர் அங்கு சென்றபோது, ஒரு உணவகத்தில் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிந்தது. அதில் மலை முழுவதும் நீல நிறத்தில் குறிஞ்சி பூ பூத்து குலுங்கி, அதில் வரையாடு ஒன்று இடப்புறம் நோக்கி நின்று வலப்புறமாக தலையை திருப்பி நின்ற காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.


மூணாறில் ஏற்கனவே அனைத்து சுற்றுலா பகுதியும் சென்றிருந்ததால் , இம்முறை குறிஞ்சி பூ மட்டுமே பார்க்க செல்வது சற்று செலவீனமாக தெரிந்தது. ஆதலால், வேறு எதாவது நல்ல பகுதிக்கு செல்லலாம் என என்னி இணையதளங்களை நாடும் போது, சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் வனத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் பருவமழை காலத்தில், வனத்தின் பசுமை மற்றும் அதன் செழிப்பு , புகைப்படம் எடுப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என என்னி, இறுதியாக தூவானம் அருவியின் அருகே உள்ள தங்கும் விடுதியை முன்பதிவு செய்தேன்.


இப்பயணக்கட்டுரையில் நாம் பார்க்க போகும் இடம் "ஏரவிக்குளம் தேசிய பூங்கா" மற்றும் சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள "தூவானம் அருவி ".


இரு மாதங்களுக்கு முன்னரே மூணாறில் தங்கும் விடுதி, தூவானத்தின் தங்கும் விடுதி என அனைத்து முன்பதிவுகளையும் செய்துவிட்டு, நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.



பல புகைப்பட கனவுகளோடு நாட்கள் நகரும் வேளையில், பருவமழையின் வீரியம் அதிகரித்து, கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. விடாது பெய்த மழையில், அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிறையத்தொடங்கியது.


பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வீடுகளே தகர்ந்து விழும் துயரங்களும் நிகழ்ந்தன. ஏறக்குறைய மூன்று வாரங்கள் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து முக்கிய நகரங்களின் சாலை வழிகளும் துண்டிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் இறுதியில், கேரளாவை மூழ்கடித்துவிட்டு சென்றது பருவமழை..!


அதனை தொடர்ந்து நாம் நீட்டிய உதவிக்கரங்களினால் விரைவாக நிலைமை சீரடைந்து வந்தது. ஆதலால், பயணம் திட்டமிட்டபடி நடக்குமா ? நடக்காத ? என குழப்பமே மிகுந்திருந்தது எனக்கு...!


இதற்கிடையில், பேருந்துக்கட்டணம் சென்னையிலிருந்து மூணாறுக்கு (படுக்கை வசதியுள்ள) சாதரண நாட்களில் ரூபாய் 800 என இருந்தது, விடுமுறை நாட்களில் ரூபாய் 1400 என மாறியது.


ஆதலால் ரயிலில் உடுமலை வரை சென்று அங்கிருந்து பேருந்தில் செல்வது சிக்கனமான ஒன்றாக எனக்குத்தோன்றியது. அவ்வாறே முன்பதிவும் செய்தேன்.


செப்டம்பர் முதல் தேதியில் மூணாறில் தங்கும் விடுதிகள் மற்றும் சாலைகளின் நிலைமை சீராக ஆரம்பித்தது. ஆனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றுமில்லாததே..!


அதற்கேற்றவாறு எனது அலுவலக நண்பரும் செப்டம்பர் முதல் வாரத்தில் அங்கு சென்று வர , எனது பயணம் திட்டமிட்டவாறு அமைந்தது.



பயணத்தின் முதல் நாள் சென்னையின் போக்குவரத்துக்கு நெரிசலை சமாளித்து, ரயிலை பிடிக்க போதும் போதும் என்றாகிவிட்டது. இதனை தவற விட்டால், அனைத்து திட்டமும் சொதப்பலாகிவிடும்.

ஏனென்றல் பெரிய விடுமுறைக்கு முந்தய தினம், சென்னையிலிருந்து கிளம்பும் பேருந்து செங்கல்பட்டை அடைய நள்ளிரவு மணி ஒன்றாகிவிடும்..!

தனியார் பேருந்து என்றால் தாமதத்தை ஓரளவிற்கு ஈடு கட்டி விரைவாக செல்வார்கள். அதே அரசுப்பேருந்து என்றால், நம்மூர் செல்ல அடுத்த நாள் மதியமே ஆகிவிடும்…!


இதெற்கெல்லாம் பயந்தே பெரும்பாலனவர்கள் ரயிலில் சென்று விடுவது வழக்கம்.


அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் உடுமலைபேட்டையை ஒரு மணிநேர தாமதத்தில் சென்றடைந்தது. இங்கிருந்து மூணாறு செல்ல போதுமான பேருந்து வசதி கேரளா அரசும் தமிழக அரசும் செய்துள்ளது. காலை வேளையில் ஒருமணி நேர இடைவெளியிலும் மதிய நேரங்களில் இரெண்டு மணிநேர இடைவெளியிலும் , மாலை மற்றும் இரவு நேரங்களில் மூன்று மணி நேர இடைவெளியிலும் பேருந்து வசதி உள்ளது. ஜீப் வசதியும் உள்ளது. ஆனால் அதில் ஒருவர் இருக்கையில் மூவர் அமரும் நிலைதான்...! ஆதலால் பேருந்து பயணமே சரியானதாக இருக்கும்.


காலை உணவு உண்ட பின், மணி பத்தை நெருங்கியது. பேருந்து கால அட்டவணைப்படி அடுத்த பேருந்து 10.40 மணிக்கே..! ஆனால் ஒரு கேரளா அரசு பேருந்து நின்றிருந்தது. பிறகு விசாரிக்க, பத்து மணிக்கும் கிளம்புவதாக கூறினார்கள். ஓடிச்சென்று ஏறினால், ஏற்கனவே ஏறியவர்கள் உட்கார இடமின்றி நின்றுகொண்டிருந்தனர். ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் மலைப்பயணத்தில் நிற்க முடியாது என தெரிந்து கீழே இறங்கும் வேளையில் நடத்துனர் வந்து, எங்கு போகவேண்டும்? என கேட்க, “மூணாறு” என்று பதில் கூற, 20 நிமிட பயணங்களில் இறங்கும் நபர்களை எழுந்திரிக்க வைத்து எங்களை அமர வைத்தார். அவர்களும் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து நின்றனர். இந்த செயல் சற்று பாவமாகத்தான் இருந்தது..!


ஆனால் தொலைதூரங்களுக்கு செல்லுவோருக்கே முன்னுரிமை எனும் நடத்துனரின் நியதியால், நங்கள் அமர்ந்தது சரியே எனத்தோன்றியது.

நகரத்தை விட்டு வெளியே சென்றதும், வான்வெளியை மறைத்து, வளைவான கிளைகளை விரித்த புளிய மரங்கள் நிறைந்த சாலையில் ,வாகனத்தின் வேகம் பெருக்கெக்க சில்லென்ற காற்று நம்மைத்தழுவியது.

இருபது கிலோமீட்டர் பயணத்திற்கப்பால், சாலையின் அகலம் குறைந்து, மலையின் அடிவாரத்தை தொட்டு, அதன் மேல் ஏற ஆரம்பித்தது.


ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சோதனைசாவடியை கடந்து பேருந்து சென்றது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டியத்தில் சில விழுக்காடு கூட இங்கு பெய்யாமல் பொய்த்து விட்டதே என்னும் அளவிற்கு மரங்கள் காய்ந்து போய் சூடான காற்று வர ஆரம்பித்தது. ஆங்காங்கே வேகத்தடைகளும் வளைவு நெளிவாக சென்ற சாலைகளில் பேருந்தின் வேகம் குறையத்தொடங்கியது.


சில நிமிடங்களில், எதிர்பாராதவிதம் சில்லென்ற காற்று நம்மைத் தாக்கியது. என்னவென்று பார்த்தால், அமராவதி அணையின் மேற்கு எல்லை..!



அடுத்த எட்டு கிலோமீட்டர் தொலைவில் சின்னார் வனவிலங்கு சரணாலயம் எல்லை (கேரளா) ஆரம்பமாகிறது. இங்கே ஓடும் சின்னார் ஆறு தமிழக மற்றும் கேரளா எல்லையாக அமைகிறது. ஆதலால் இருமாநில வனத்துறை சோதனைசாவடிகள் அமைந்துள்ளது.


உடுமலை - மூணாறு சாலை குறுகலாக இருந்த போதும் நீளமான பேருந்துகளே இயக்கப்படுகிறது. இரெண்டு கொண்டை ஊசி வளைவுகளில் மட்டும், பேருந்து ஒருமுறை பின்னோக்கி வந்து மீண்டும் முன்னேறிச்செல்கிறது.


ஏறக்குறைய ஆலம்பட்டி வரை பசுமையை அவ்வளவாக காணமுடியவில்லை. அதனைதொடர்ந்து பருவமழை நனைத்த,..! இல்லை இல்லை பருவமழை அடித்த காடுகள் பசுமையாய் காணப்பட்டன. மழைகாலங்களில் கூட இந்த இடங்கள் மதிய வெயிலினால் அனல் காற்றை கக்கிக் கொண்டிருந்தன. நாளை இங்கு வந்து தூவானம் அருவிக்கு நடைபயணம் சென்று இரவு தங்க வேண்டும். இவ்வெயிலை நினைக்கும் போது அப்பயணம் மிகுந்த சிரமமாக தோன்றியது.


அதனைதொடர்ந்து, சில கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு கரிமுட்டி அருவி அதற்கான அழகில், சாலையோரம் கொட்டிக் கொண்டிருந்தது. இது மறையூர்க்கு சற்று முன்னதாகவே காணப்படுகிறது.


பின்னர் பேருந்து மறையூர் அடைந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மூணாறு கிளம்பிச்சென்றது. அப்போதுதான் மலை பிரதேசங்களுக்கே உண்டான குளுமை வரத்தொடங்கியது. வழியில் லக்கம் அருவி, தேயிலைத்தோட்டம், தூரத்து மலைகளின் கொட்டும் அருவிகள், மழையில் சரிந்த நிலப்பரப்புகள், சாலையோர கிராமங்கள், சரிசெய்த சாலைகள் , குக்கிராம பேருந்து நிறுத்தங்கள், , சோதனை சாவடிகள், சாலையை கடக்கும் காட்டாறுகள் என மதிய நேர பயணம், பசியோடு எங்களை மூணாறுக்கு அழைத்துச்சென்றது.


பிறகு ஏற்கனேவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியில் சென்று மதியஉணவை அங்கேயே சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலையில் சிறிது தூரம் வெளியில் சென்று வர, பொத்தமேடு பகுதியை தேர்தெடுத்து ஆட்டோவில் அங்கு சென்றோம்.


மூணாறில் இருந்து கொச்சின் செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளே இடம்தான் இது. பசுமைப் பள்ளத்தாக்கான தேயிலை தோட்டத்தை கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்டு ரசிக்குமாறு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து ஏறக்குறைய 60கிலோமீட்டர் தூரத்தில் இடுக்கி அணையின் வளைந்த சுவர் கூட, பனி விலகிய போது கண்டு ரசிக்கலாம் என அங்கிருந்த தேநீர் கடை நபர் கூறினார். ஆனால் எங்கள் கண்களுக்கு அப்போது அது தென்படவில்லை, மூடு பனி சூழ்ந்திருந்ததால்..!




அவ்வாறே சில மணி நேரங்கள் கழித்துவிட்டு, இரவில் விடுதிக்கு சென்று , உணவு உண்ட பின்னர் தூங்கச்சென்றோம். இரவில் சற்று குளிர் அதிகமாகதான் இருந்தது.

இருந்தாலும் குளிர் காலங்களில் இருப்பதை போன்று உறைநிலையை (0டிகிரி) தொடவில்லை.

மறுநாள் காலை எழுந்து, விரைவாக கிளம்பி, எரவிக்குளம் பூங்காவை காலை 8 மணிக்குள் செல்வதாக திட்டம். ஆனால் விடுதியில் காலை உணவு எட்டு மணிக்கு மேல் தயாரானதால் சற்று தாமதமாகிவிட்டது.


அதன் பின்னர் கேரளா அரசு பேருந்து உடுமலை செல்ல தாயாராய் நின்றிருந்தது. அதில் ஏறி அமர, அடுத்த 15நிமிடங்களில் பூங்கா வந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், அடையாள அட்டை சரிபார்த்துவிட்டு, பூங்காவினுள் செல்லும் வாகனத்தில் ஏற வரிசையில் நின்றோம்.


முப்பது பேர் அமரக்கூடிய சிற்றுந்தில், நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச்செல்கின்றனர். செல்லும் வழியில் தேயிலைத்தோட்டங்கள், தூரத்து மலைத்தொடர்கள் என நம்மை வெகுவாய் கவருகின்றன. இதற்காக நபருக்கு ரூபாய் 120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது சற்று அதிகம் தான்..!




இவ்வாண்டு குறிஞ்சி பூ பூப்பதால், ஒவ்வொரு பத்து மீட்டர் தூரத்திற்கும் ஒரு வனக்காவலர்கள் உள்ளனர். குறிஞ்சி பூவை தொட அனுமதி இல்லை. பறித்தால் ரூபாய் 2000 அபராதம். இது இப்பூங்கவிற்கு மட்டுமல்லாமல் மூணாறு முழுவதுக்கும் அமல்படுத்தப்பட்ட சட்டமாகும்.




ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை குறிஞ்சி பூ பூக்கும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்நேரம் மலை முழுவது பூ பூத்து, நீல போர்வையாக காணப்பட்டிருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழையின் சீற்றத்தால், ஏற்கனவே பூத்த மற்றும் பூக்க தொடங்கியவை அனைத்தும் அழுகி, கொட்டிவிட்டன. ஆதலால் மழைக்கு பின்னர் இப்போது ஆங்காங்கே பூத்துக்காணப்படுகிறது. இது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே..!

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை சில லட்சங்களில் எதிர்பார்க்கப்பட்டதால், கழிப்பிட வசதி , சாலை வசதி, கண்காணிப்பு நபர்கள், சாலையோர தடுப்புகள் என அனைத்தும் சிறப்பாய் திட்டமிடப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை, வனத்துறை, விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்துக்கு என அனைத்தும் சராசரி வருமானம் கூட கிடைக்காமல் முடங்கி தவிக்கின்றன.

பதினைந்து நிமிட பயணத்திற்கு பிறகு பூங்காவை அடைந்து, ஆங்காங்கே பூத்து குலுங்கிய மலர்களை ரசித்துவிட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த நீலகிரி வரையாடுகளையும் கண்டு ரசித்தோம்.


சாதாரண வருடங்களில் வரையாடுகளை மட்டுமே காண முடிகிறது.

இவ்வாண்டு குறுஞ்சியுடன் வரையாடுகளை காண்பது எழில்மிகு தோற்றமாக அமைந்தன .

ஏரவிக்குளம் தேசிய பூங்கா அமைந்துள்ள மலைத்தொடர் ராஜமலை என்றழைக்கப்படுகிறது.

ஆதலால், இப்போது “ராஜமலை யாரால் அழகு ? “ என்ற கேள்வி வரலாம் ..!

நித்தமும் அலங்கரிக்கும் வரையாடா ?

பனிரெண்டு ஆண்டுக்கொருமுறை வரும் குறிஞ்சி மலரா ?

குறிஞ்சி நிலத்தையாலும் வரையாடுதான் என்றும் அழகு என்பேன்..!




அதன் பிறகு குறிஞ்சி மலரை மிக அருகிலும், வரையாடு குறிஞ்சி பூவிற்கிடையே இருப்பது போன்றும், தூரத்தில் பாறையின் மேல் கம்பீரமாய் நிற்பதையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தேன்.



ஏறக்குறைய இரெண்டு மணி நேரமாக எனக்கான பாணியில் சில புகைப்படங்களோடு பூங்காவை விட்டு விடை பெறும் நேரம் வந்தது.

அப்போது ஒரு சிறுமி அழகாய் கோபித்துக்கொண்டு அவள் பெற்றோரை விட்டு வேகமாக நடந்துகொண்டிருந்தாள். என்னவென்று கேட்ட போது வெயில் தாங்க முடியவில்லையாம் ..! மூணாறில் அப்போது கிட்டத்தட்ட 27டிகிரி இருந்திருக்கலாம். அதுக்கே அந்த நிலை ..! அவ்வளவு கோபம்...!


அப்போது, சிறு வயதில் சட்டையின்றி கோடை வெயிலில் விளையாடி, வியர்குருவிற்கு நுங்கு பட்டைகளை தடவிய நாட்கள் நினைவில் வந்து சென்றன.

அதை நினைக்கும் போது, இதெல்லாம் என்னவென்று சொல்வது..!

நேரமும் 12 மணியை தொடும் வேளையில் திரும்பி செல்ல காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு வரும் சிற்றுந்து திரும்பி செல்லும் போது இங்குள்ள நபர்களை ஏற்றிச்செல்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகல் முழுவதும் சேவை புரிந்தவண்ணம் இருந்தன.

இறுதியாக பூங்காவின் நுழைவிடம் வர, கீழே இறங்கி, அருகிலிருந்த தேயிலைத்தூள் விற்குமிடத்தில், சிறுது வாங்கிவிட்டு காத்திருக்கும் வேளையில், பேருந்து வந்தது. தற்போது உடுமலை வழியில் ஆலம்பட்டி எனுமிடத்தில் இறங்க வேண்டும்.


தூவானம் அருவி செல்ல, மதியம் 2 மணிக்கு அங்கிருக்கவேண்டும். தற்போது மணி 12 என்பதால், இன்னும் ஒன்றரைமணி நேரங்களில் சென்றுவிடலாம்.

இது தமிழக அரசுப்பேருந்து. நிலைமை சற்று மோசமாகத்தான் இருந்தது. பேருந்தின் பின்புறம் அமர்த்திருந்ததால் , ஒவ்வொரு வளைவிலும் குலுங்கி இடப்புறம் வலப்புறம்மென்று சாய்ந்து, தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஆதலால் பேருந்தின் முன்புற இருக்கைக்கு சென்றோம். ஆனால் பேருந்திலிருந்து ஒலித்த பாடல்கள், அதன் ஒலியளவு, ஜன்னல் கம்பிகள், கண்ணாடிகள் என அனைத்தின் அதிர்வுகள் சேர்ந்து எரிச்சலை ஏற்படுத்தியது.


குறைந்தபட்சம் மலை பிரதேசங்களில் செல்லும் பேருந்துகளுக்கு தனி கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சில நேரங்களில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நடப்பதை காண்கிறோம். நம்மிடம் மிக திறமையான ஓட்டுனர்கள் இருந்த போதிலும், விபத்து நடக்கிறது என்றால், அது பராமரிப்பற்ற தன்மையே காட்டுகிறது.


அவ்வாறு விபத்து ஏற்பட்டுவிட்டால், உயிரிழந்தவர்களுக்கு சில மணி நேரங்களில் உடனடியாக இழப்பீட்டுத்தொகை சில ஆயிரங்களாகவோ அல்லது சில லட்சங்களாகவோ அறிவிக்கப்படும்..!

தவறை மறைப்பதற்கு இழப்பீடா ?


மாற்றம் தேவை...! இழப்பீடுகளுக்கு பதில் சேவையில் முன்னேற்றமேற்பட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.


மறையூரை மதியம் ஒன்றரை மணியளவில் பேருந்து சென்றடைந்தது. மதிய உணவிற்காக இருபது நிமிடங்கள் நின்றதால் நாங்களும் இறங்கி, பேருந்து நிலையம் எதிப்புறமுள்ள ஒரு சிறிய உணவகத்தில், வீட்டில் சமைப்பதை போன்று சுவை இருக்குமென்று சக பயணியொருவர் கூறியதால், அங்கே சென்றோம். மூவகை குழம்பு, பொரியல், கேரளா பெரிய சாதம் மற்றும் நம்மூர் சாதமும் கிடைத்ததால் நன்றாய் சாப்பிட்டோம். உணவகம் மிகவும் சிறிதாய் இருந்தாலும் சேவை சிறப்பாய் இருந்தது.

சாப்பாட்டின் விலை ரூபாய் 50 மட்டுமே..!


மீண்டும் பேருந்து கிளம்பி சரியாய் இரெண்டு மணிக்கு எங்களை ஆலம்பட்டி வனச்சரக அலுவலகத்தின் முன் இறக்கி விட்டது.




அங்கே சென்று முன்பதிவுகளை சரிபார்த்துவிட்டு சிறுது நேரம் அமர்ந்திருந்தோம். இணையத்தில் முன்பதிவின் போது பாதி தொகையான ரூபாய் 1500 செலுத்த வேண்டும். நேரில் வரும் போது மீத தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் முன்பதிவு செய்யும் தகவல்கள் மூணாறில் உள்ள அலுவலகத்துக்கே செல்லும். ஆதலால் தூவானம் அருவியில் தண்ணீர் அதிகமாக வரும் போது ஆற்றை கடந்து செல்வது மிகவும் சிரமமாய் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தங்கும் போது ஏதேனும் அசைவ உணவு வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல வேண்டும். ஆதலால் ஆலம்பட்டி அலுவலர்களை தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளையும், நமது வருகையும் சொல்ல வேண்டும்.


தூவானம் செல்ல எங்களுக்கு முந்தைய நாள் முன்பதிவு செய்திருந்த நபர்கள் மாலை நான்கு மணிக்கு வர, அதற்கு மேல் அங்கு செல்வது பாதுகாப்பானது இல்லை என்று வேறொரு தங்கும் விடுதிக்கு மாற்றி அனுப்பினர். ஏனென்றால் மாலை 4 மணிக்கு நடந்து சென்றால் ஏறக்குறைய அருவியை அடைய 6 மணி ஆகிவிடும். நடைபயணம் ஆற்றையொட்டி இருப்பதால் யானை மற்றும் காட்டு மாடுகள் தண்ணீர் அருந்த வரும். ஆதலால் பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்கின்றனர்.


இரவு உணவு மற்றும் காலை உணவு என்ன வேண்டும் என கேட்டு அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வனத்துறையினர் எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். இடைப்பட்ட வேளையில் அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்த சென்றோம். தேநீரா இல்லை நன்னாரி தேனீரா என்ற கேள்வி வர, புதிதாயிருந்த நன்னாரி தேநீரை தேர்தெடுத்தோம். சிறுது நேரத்தில் கரும்பு சாறு நிறத்தில் சூடாய் கிடைத்தது. அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. நாம் வீட்டில் போடும் தேநீரில் நன்னாரி சர்பத் கலந்தது போன்ற உணர்வு.


இங்குள்ள பழங்குடி மக்கள் சுற்றுலா நோக்கிற்காக பயிற்சி பெற்றுள்ளனர். முழுக்க முழுக்க அவர்களே இந்த ஆலம்பட்டி வனச்சரகத்தை வழிநடத்துகின்றனர். சுற்றுலாபயணிகளை காட்டிற்குள் அழைத்து செல்வது, தங்கும் விடுதியில் உணவு சமைப்பது , இரவு அங்கேயே தங்கி மறு நாள் காலை கூட்டி வருவது, காடுகளை பற்றி எடுத்துக்கூறுவது என பல்வேறு அம்சங்களில் பணிபுரிகின்றனர்.


இங்கிருந்து நடைபயணமாக மூன்று இடங்களுக்கும் தினந்தோறும் அழைத்துச்செல்கின்றனர். (தூவானம் அருவி, பழங்கால மண் ஓவியங்கள் உள்ள பகுதி மற்றும் வாயுமலை ). இது மொத்தம் 4~5 கிலோமீட்டர் நடைபயணமாக இருக்கும். காலை மணி 8 மணி முதல் 11 மணிக்குள் சென்றால், மாலை 3~4 மணியளவில் திரும்பி வந்து விடலாம்.


இதுமட்டுமில்லாமல் மூன்று தங்கும் விடுதி சேவையும் உள்ளது. (தூவானம் அருவி, ஜெல்லிமலை மற்றும் அணில் வீடு). இதற்காக கட்டணம் ரூபாய் 3000. இதில் தூவானம் தங்கும் விடுதி சிறப்பானதாய் இருக்கும். ஏனென்றால் செல்லும் வழியானது அடர்ந்த கட்டுக்குள் ஏறக்குறைய ஒன்றரை மணி நேர நடைபயணமாகவும், தூவானம் அருவியின் மிக அருகேயும் அமைந்திருக்கின்றன.


தூவானம் அருவிக்கு செல்லும் வழியானது உடுமலை-மூணார் சாலைக்கு இணையாக சில தூரம் சென்று, பிறகு இரு மலைகளுக்கு இடையே இறங்கி, அங்கே ஓடும் பம்பார் நதியின் வலப்புற கரையின் பக்கவாட்டில் செல்லுமாறு அமைந்துள்ளது. அருவிக்கு சிறுது தூரத்திற்கு முன்பு, ஆற்றைக்கடந்து செல்லவேண்டும்.


எங்களை வழிநடத்த வனத்துறையின் சார்பாக கண்ணன் வந்ததும், நடைபயணம் தொடர்ந்தது. சாலையின் இடதுபுறம் உள்ளே இறங்கியதும் சில நிமிடங்களில் அடர்ந்த பசுமைப் புல்வெளி, ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே சிறுசிறு மரங்கள், பறவைகளின் ஓசை, சலசலவென ஓடும் கிளையருவி என வனத்தின் மிரட்டல் அழகை உடனடியாக உணர முடிந்தது.


நேற்றைய பொழுதை காட்டிலும் இன்றய தினம் வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டதால் நடைபயணம் நன்றாக இருந்தது.

ஆங்காங்கே மண்தட்டுகளில் கயிறு கட்டி மரங்களில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்று கேட்கும் போது, கோடை காலங்களில் மிகவும் வறட்சியாக இருக்கும், ஆதலால் பறவைகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வைப்போம் என கூறினார். அதுமட்டுமல்லாமல், கட்டுக்குள் சிறு சிறு குழிகள் வெட்டி அதில் 1000 லிட்டர் தண்ணீர் ஊற்றி வைப்போம் என்றனர். இது காட்டுமாடுகளுக்காகவும், சில சமயம் நீர் கலங்களின்றி இருந்தால் யானைகளும் நீரருந்தும் என்றனர்.

அவ்வாறே சற்று தூரம் சென்றதும் சந்தன மரங்களையும், அதில் குறித்துள்ள வரிசை எண்களையும் சுட்டிக்காட்டினார். அது மரங்களின் எண்ணிக்கைக்காக போடப்பட்டிருந்தது.

தற்போது இரு மலைகளுக்கு இடையே இறங்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.


சற்று இறக்கமாக இருந்ததால் சிரமமின்றி நடக்க முடிந்தது. தோளில் துணிமணிகளை உள்ளடக்கிய ஒரு பையும், இடதுபுறத்தில் புகைப்படக்கருவி வைக்கும் பையும், கையில் புகைப்பட கருவி என மொத்த எடையும் எனக்கு மிகுந்த பளுவை ஏற்படுத்தின. அவ்வப்போது எடுக்கும் சில புகைப்படமும், வனத்தின் பசுமை கலந்த இசையும், சில்லென்ற சுவாசமும் என்னை உற்சாகப்படுத்தின...!


கிளையாறு ஒன்று பம்பார் ஆறுடன் சேருமிடத்தில் பாறைகளில் தண்ணீர் வற்றி மரக்கிளைகள் உதிர்ந்து காணப்பட்டது. தீடீரென ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் எங்களின் வருகையினால் சிறகடித்து வட்டமிட்டு பறந்தன. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் பறந்தது, கண்கவரும் விதமாக அமைந்தது.


“அடுத்த கூட்டம் எதாவது இருந்தால் அருகில் நெருங்காமல் கூறுங்கள்”, என கூறி சில தூரம் சென்றதும், எனக்கு வழி விட்டு, “அதோ பட்டாம்பூச்சி கூட்டம் பாருங்கள்”, என கூறினார், கண்ணன். நானும் ஒவ்வொரு அடிக்கு ஒரு படம் என அருகில் செல்லும் வரை நான்கைந்து படம் எடுத்தேன். அருகே சென்றதும் கூட்டமாய் பறக்க ஆரம்பித்தது. அவ்வாறே சுவாரஸ்யமாக காட்டிற்குள் பயணம் சென்று கொண்டிருந்தது.


சிறிது தூரத்தில் புற்கள் நிறைந்த ஒற்றையடி பாதையில் செல்லும் போது வலதுபுறத்தில் மரத்தில் மேல் அமைந்த மரவீடு ஒன்றை பார்க்க நேர்ந்தது.


அதைப்பற்றி கண்ணன் கூறியதாவது" இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கும் விடுதி இருந்தது. அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியபோது, அன்றிரவு யானை ஒன்று அம்மரத்தடியில் குட்டி போட்டு மூன்று நாட்களாக அங்கேயே தங்கியிருந்தது. ஆதலால் அவர்களுக்கு உணவு கூட கொடுக்க முடியாமல் போயிற்று. ஆதலால் அதிலிருந்து இங்கே யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. அதன் பிறகு தான் தூவானம் அருவியின் அருகே பாறையின் மேல் கற்களால் மதில் சுவர் அமைத்து வீடு கட்டினோம்" என்றார்.



மரக்கட்டைகள், தகரங்கள் என சிதிலமடைந்து காணப்பட்டது மரவீடு.


இக்கதையனைத்தும் கேட்டுக்கொண்டே செல்லும் போது சற்று தூரத்தில் காட்டாறு ஒன்றை கடக்க நேரிட்டது. வெள்ளம் அதிகமாக வரும் நேரத்தில் எளிதில் கடக்க மரங்களால் ஆன சிறிய பாலத்தை அமைத்திருந்தனர். அதுவும் கனமழையின் காரணமாக சற்று சேதமாகியிருந்தது.



நான்கைந்து மரக்கட்டைகளை சமமாக வைத்து சிறிய பாலம் அமைந்திருந்தாலும், அனைத்தும் வலுவிழந்து காணப்பட்டது. இருப்பினும் அதில் ஓரளவிற்கு வலுவானதாக இருந்த கட்டையை காட்டி அதில் நடந்து வரும்படி கண்ணன் கூறினார்.


பின்னர் சிறிது தூரம் சென்று, பின்னே திரும்பி கீழே விழுந்த மரங்களை புகைபடமெடுக்கும் வேளையில், திடீரென ஒரு ஆள் நடந்து வருவது "பக்" கென்றாகிவிட்டது. சுதாகரித்து கொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க, அவரும் அருகில் வந்து கண்ணனிடம் பேசிக்கொண்டே முன்னே சென்றார்.


பொதுவாக காட்டிற்குள் சென்று இரவு தங்கி வர, நம்மோடு இரெண்டு வனக்காவலர் வருவார்கள். சில உணவுப்பொருட்களை எடுத்து வர தாமதமானதால் மற்றொரு நபர் இப்போது வருகிறார். அவர் பெயர் விஜய் என்று கண்ணன் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரின் பொறுப்பில் தான் நாங்கள் நாளை மதியம் வரை இக்காட்டினுள் இருக்க வேண்டும்.


அவ்வாறே கடந்து செல்லும் போது பள்ளம் மேடுகள் என மலைத்திட்டுகளில் நடக்க நேரிட்டது. அப்போது பம்பாறு ஆற்றின் ஓசை எங்கள் காதுகளுக்கு மெதுவாக கேட்கத்தொடங்கியது. சிறிது தூரம் செல்ல செல்ல ஆற்றின் ஓசை அதிகரித்து, வனத்தின் ஓசை குறையத்தொடங்கியது.


சிறிய ஒற்றயடிப்பாதை, கீழே ஏறக்குறைய 50அடி ஆழத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது அதன் அபாயம். சிறிது கால் இடறினாலும் கீழே விழவேண்டியதுதான்..!


ஆதலால் சிறிது தூரம் கவனமுடன் நடந்துகொண்டே, இன்னும் எவ்வளவு தூரம் என கண்ணனிடம் கேட்க, “சிறிது தூரம்தான்” என பதில் வந்தது. பதில் வந்த சில நிமிடங்களில் தூவானம் அருவி ஒரு 500 மீட்டர் தொலைவில் கண்ணுக்கெட்டியது. புதிதாய் தழைத்த இலைகளுக்கிடையே, கரும்பாறையில், பால் போன்ற வெண்ணிறத்தில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது.


இலக்கை அடைந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில், பயணக்களைப்பு மறந்து குதூகலமானது. இப்போது ஆற்றிற்கு இணையான எதிர் திசையில் நடந்து கொண்டிருக்கையில், ஏற்கனவே காலையில் நடைபயணம் சென்ற நபர்கள், அருவில் குளித்து விட்டு, மிகுந்த களைப்போடு இரெண்டு வனக்காவலர்களோடு எதிரே வந்து கொண்டிருந்தனர். ஒரே நாளில் சென்று மீண்டும் திரும்பி வருவது சற்று கடினமே ..!

முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் காட்டை ரசித்து நடப்பவர்கள் இங்கு எளிதில் சென்று திரும்பிவிடலாம். ஆனால் "திடீரென்ற ஆசையினால் நடக்க வருபவர்கள் , சிறிது தூரத்திலே களைப்படைந்து விட்டு, அருவிக்கு கூட செல்லாமல், பாதி வழியிலே திரும்பி செல்வதும் உண்டு" என கண்ணன் கூறினார்.


பிறகு ஆற்றைக்கடக்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து அருவி ஏறக்குறைய 100 மீட்டர் தொலைவில் ஆர்ப்பரிக்கும் சப்தத்தில் கொட்டிக்கொண்டிருந்தது. ஆற்றைக்க கடக்க காலணிகளை கழற்றி, புகைப்படக்கருவியை அதன் பையில் வைத்து தயாரானோம்.


ஆற்றில் கால் வைத்தவுடன் சில்லென்று ஏறியது அதன் குளிர்தன்மையினால்..!


வடஇந்தியாவின் காற்றழுத்தத்தை ஈடுகட்ட, இந்திய பெருங்கடலில் வீசும் ஈரக்காற்றை மேற்குத்தொடர்ச்சி மலை தடுத்து, மழை மேகமாய் மேலே எழுந்து , வெப்பம் குறைந்து, மழையாய் பொழிந்து , வனத்தினை நனைத்து, உயிர்களை செழித்து, நிலத்தினை குளிர்வித்து, மீண்டும் ஊற்றாய் உருவெடுத்து, கிளைகளை சேர்த்து, தன்னோடு வரும் செடி கொடிகளை அள்ளிக்கொண்டு, இரவு பகலாய் ஓடி வந்து, தூவானத்தில் அருவியாய் கொட்டி அமராவதி அணையை அடையும் நீரல்லவா இது..!



ஆதலால் அப்படித்தான் குளிரும்..! என மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன்.


பிறகு மெதுவாக கண்ணன் முன்னே செல்ல அவரை தொடர்ந்து வழுக்கும் பாறையில் காலூன்றி நீரின் ஓட்டத்தை சமாளித்து ஒவ்வொரு அடியாக நடந்து சென்றோம். சில இடங்களில் பாறை இடுக்குகளில் இடுப்பளவு நீரில் செல்ல நேர்ந்தது. ஆற்றின் வேகம் நம்மை அடித்துச்செல்லும் அளவு இல்லையென்றாலும், கீழே விழுந்தால் பாறைகளினால் அடி படும் அபாயமும், உடைமைகள் நனைவதும் மற்றும் அடித்துச்செல்வதும் கண்டிப்பாக நடக்கக்கூடியது. ஆதலால் மிக கவனமாக, மூங்கில் குச்சியை பிடித்துக்கொண்டு கடந்து சென்றோம். மிக அதிகமாக வெள்ளம் வரும் போது இரு கரைக்கும் கயிறு கட்டி அதை பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வோம் என கூறினார்.


பாதி தூரம் ஆற்றைக்கடந்து ஒரு பெரிய பாறையில் நின்று, அருவியை புகைபடமெடுத்துக்கொண்டு, மீதி தூரம் கடந்து செல்ல நேரிட்டது. இப்போதுதான் இடுப்பளவு பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஆடை முழுவதும் நனைந்துவிட்டது.


பின்னர் ஆற்றைக்கடந்த நிம்மதியுடன் மணல் திட்டு மற்றும் சிறு சிறு பதிந்த பாறைகளின் வழியே நடந்து சென்றோம். இந்த இடங்களில் சில வாரங்களுக்கு முன்பு ஆளுயரத்திற்கு நீர் சென்றதை , அடித்துச்சென்ற குப்பைகள் கிளைகளில் மாட்டிக்கொண்டிருந்ததை வைத்து கணிக்க முடிந்தது.


இறுதியாக அருவிக்கு சற்று முன்னர் இடது புறம் சென்று தங்கும் விடுதியை அடைய வேண்டும். அவ்வாறு செல்லும் போது அருவியின் சாரல் நம்மை மெல்ல நனைத்தது. கூடவே சில தூறலும் போட விரைவாய் சென்று அறையை அடைந்தோம். கண்ணனும், விஜயும் எங்களை தாழ்வாரத்தில் சற்று நேரம் காத்திருக்க சொல்லி அறையை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்து, சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்தனர். காத்திருக்கும் அவ்வேளையில் அருவியின் அருகே சென்று அதன் சாரலில் நனைய ஆசை வந்து அங்கே சென்றோம்.



மெல்லிய தூறல், மூங்கில் மரங்களின் இருட்டு, வெண்பனிபோல் அருவியின் சாரல், பிரமாண்டமான சப்தம் என இயற்கையை அதன் இடத்தில் இருந்து கொண்டு ரசித்தது மனதை சிலிர்க்க வைத்தது. ஆங்காங்கே யானையின் சாணம் தென்பட்டது. இருக்கும் இடம் சற்று ஆபத்து என தெரிந்து கொண்டு அறைய அடைந்தோம். அதுவரை தூறல் போட்ட மழை, கொட்டத்தொடங்கியது.


இப்பயணத்தின் முன்பதிவின் போதே இக்கதையின் தலைப்பை "தூவானத்தின் தூறல்கள் " என உறுதிபடுத்தினேன். அதற்கேற்றவாறு இங்கே தங்கும் போது தூறல் வந்தால் மிக நன்றாக இருக்கும் என எண்ணினேன். இம்மழையைக் கண்டதும் அது உண்மையாக மாறியதை என்னி மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.


அதற்குள் அவர்களிருவரும் சென்று சமையலுக்கு தேவையான விறகுகளை சில நிமிடங்களில் கொண்டு வந்து சேர்த்தனர்.


இரவில் சப்பாத்தி, சாதம், பருப்புக்குழம்பு, காய்கறிகள் என ஏற்கனேவே கூறியிருந்ததால் சமையலுக்கு தீவிரம் காட்டினர். அசைவ உணவு வேண்டுமெனில் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருந்தால் இங்கு மீன்பிடி வலைகள் மூலம் அருவியின் அருகே மீன் பிடித்து சுட்டுத் தருவார்கள் .


அதன் பிறகு அருவில் குளிக்க ஆசை வந்து மீண்டும் அங்கு சென்றோம். அருவியின் ஓரத்தில் கிளையருவி கொட்டிக்கொண்டிருந்தது. அதனருகே செல்லும் போது, பாறையில் உதிர்ந்து அழுகிய நிலையில் இருந்த அரசமரத்தின் பழங்கள் வழுக்கி விட்டது. விழுந்ததில் பின்புறம் அடி படாமலிருக்க கையை ஊன்றினேன். சுதாகரித்து மீண்டும் எழுந்து அடுத்த அடி வைத்து மெதுவாய் சென்று அருவியில் மேனி நனைக்க , மிகவும் சில்லென்று உணர்வு உரோமங்களை குத்திட்டு நிற்கச்செய்தது. பிறகு மெதுவாய் தலை நினைத்து குளியல் ஆரம்பமானது.


இருபது நிமிடங்களுக்கு பின்னர், அறைக்கு சென்று ஈர துணிகளை மாற்றிவிட்டு, அருவியை ரசித்துக்கொண்டே அமரும் வேளையில் சூடான தேயிலை நீரை கண்ணன் எங்களுக்களித்தார்.


அந்தி சாய்ந்து வெளிச்சம் குறையத்தொடங்கியது. ஒருபுறம் இருள் சூழும்நேரத்தில் செவ்வானம் தோன்ற, விஜய் புகைபடமெடுக்க அருவியின் அருகே ஓடிச்சென்றார். நமது கால்கள் சும்மா இருக்குமா என்ன ? கேமராவுடன் ஓடிச்சென்று, செவ்வானத்தின் கருக்கலில் மரங்கள் காணாமல் போக, கொட்டும் அருவியின் அழகு கண்ணைப் பறித்தது.


அக்காட்சியை புகைப்படம் எடுக்க, படம் சரியாய் வரவில்லை. படத்தில் வட்டவடிவில் ஏராளமான வெண்புள்ளி தெரிந்தது.


அருவியின் சாரல், லென்ஸில் பட்டு இவ்வாறு ஆகிறதோ? என ஒவ்வொரு புகைப்படத்திற்கும் துணியை வைத்து துடைக்க மீண்டும் மீண்டும் அவ்வாறே வந்தது. வைத்திருந்த ஒரு கேமராவும் அவ்வளவுதானா என எண்ணம் தோன்றியது எனக்கு...!


அதன் பிறகு பிளாஷ் இல்லாமல் படம் எடுக்க மிகச் சரியாய் வந்தது.




காரணம் புரிந்தது மகிழ்ச்சியும் வந்தது. எவ்வாறெனில், பிளாஷ் வரும் போது, பறந்து வரும் அருவியின் சாரல் எதிரொளித்து இவ்வாறு தெரிகின்றது. செவ்வானத்தை இருள் மெதுவாய் மறைக்க, அறையை நோக்கி விரைவாய் சென்றேன்.


இரவு உணவு தயாராய் இருந்தது. சுட சுட சப்பாத்தி, சாதம் & சாம்பார் கூட்டு என மழைக்கு இதமாய் உணவருந்தினோம். நாவிற்கு மிகவும் நெருக்கமான சுவையாய் இருந்தது..!


நமது வீட்டில் சமைப்பது போன்று .! கண்ணனிடம் "நீங்கள் வீட்டிலும் சமைப்பீர்களா” என்று கேட்கும் போது, "இல்லை இதுமாதிரி சமயங்களில் இங்கு வந்து சமைப்பது மட்டுமே” என்றும், “எப்போதாவது கோடை காலங்களில் வற்றிய ஆற்றின் நடுவே முகாமிட்டு இரவில் சிக்கன் சமைத்து சாப்பிடுவோம் " என கூறினார்.


மழை தொடர்ந்து பெய்ந்து கொண்டிருந்தது. பயணக்களைப்பும், உண்ட உணவும் கண்ணில் தூக்கத்தை வரவழைத்தது. பின்னர் நாங்கள் அறையினுள் தூங்க சென்றோம். கண்ணனும் விஜயும் வெளியே உள்ள தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டனர்.


வனத்தின் இரவு ஓசையான, பூச்சிகளின் ரீங்காரங்கள்; தூரத்தில் ஊளையிடும் விலங்குகள்; காற்றில் அசையும் மரங்கள் என அனைத்தையும் அருவியின் சப்தம் ஓரங்கட்டியது.


அருவியின் ஓசை ரஹ்மானின் இசை போன்று ஒரு இசைக்கலவையாய் இருந்தது. கொட்டும் மழை, பாறையை தீண்டும் நீர், உருண்டோடும் பாறை, அடித்துச்செல்லும் காட்டாறு என பிரமாண்ட ஓசையாயிருந்தது.


நள்ளிரவில் திடீரென முழிப்பு. கைய விரலில் எதோ ஊசி குத்துவதை போன்ற வலி. சட்டென எழுந்து விளக்கை அணைக்கையில், தெறித்து ஓடியது ஒரு எலி ..! வீடு முழுவதும் மரத்தினால் உருவாக்கிருப்பதால், சிறுதுளையிட்டு குளியலறை கதவு வாயிலாக உள்ளே வந்துள்ளது. மீண்டும் வந்து கடித்து விடுமோ என எண்ணி தூக்கம் வராமல் விடிய விடிய புரண்டு படுத்ததில் அதிகாலை வருவதே நீண்டு கொண்டிருந்தது.


இதற்காகத்தான் ஒரு பெரிய பெட்டி தகரத்தினால் செய்து அதனினுள் போர்வை , தலையணை, பாய், மற்றும் இதர பொருட்களை உள்ளே வைத்து பூட்டிவிடுகின்றனர்.


மேலும் இங்கு சூரிய சக்தியில் இயங்கும் மூன்று விளக்குகள் மட்டுமே உள்ளது..!


ஆதலால் மொபைல் மற்றும் கேமரா சார்ஜ் செய்திட வசதி இல்லை. இங்கு மட்டுமில்லை, ஆலம்பட்டி அலுவலகத்திலும் இதே நிலை தான்..!

இங்கு பெரிய பிளாஸ்டிக் தொட்டி வைத்து அதற்கு தேவையான நீரை அருவியின் உயரத்திலிருந்து குழாய் மூலம் அதுவே சேகரித்துக்கொள்கிறது. இந்த நீர் குளிக்க சமைக்க பயன்படுத்தப்படுகிறது.


அதிகாலை வந்தவுடன் ஜன்னலை திறந்து அருவியை நோக்கும் போது இரவில் பெய்ந்த மழையின் காரணமாக நீரின் அளவு சற்று மிகுதியாயிருப்பது போன்று தோன்றியது. பிறகு அவர்களும் எழுந்து காலை உணவிற்காக தயார் செய்து கொண்டிருந்தனர்.


கண்ணனிடம் அருவியில் நீரின் அளவு கூடியுள்ளதா? என கேட்க, "ஆம்" என்றனர். எவ்வாறு கணிக்கின்றீர்கள் என கேட்ட போது, "அருவியின் உச்சியில் உள்ள சிறு சிறு திட்டுகளில் வழியும் நீரின் அளவை பொறுத்து கணிக்கலாம்" என்றனர்.


அதன் பிறகு அருவியின் உச்சிக்கு அழைத்து செல்வீர்களா என கேட்கும் போது, " போகலாம்" என கூறினார்.


காலை உணவை வந்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என கூறி விட்டு தூவானம் அருவியின் மேல் பகுதிக்கு சென்றோம். அருவியின் இடதுபுறத்தில் மேட்டில் ஏறி பிறகு சிறிய பாதையை தொடந்து செல்லும் போது சில நிமிடங்களில் மேற்பகுதியை அடைந்தோம். வழியின் சில தூரம் வாய்க்கால் போன்று வெட்டப்பட்டிருந்தது. “எதற்காக”? என்று கேட்கும் போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழே உள்ள மலை கிராமங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் நோக்கில் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்திற்கு பிறகு மலையின் அமைப்பு மேடாய் அமைந்திருப்பதால் மழை காலங்களில் நீர் செல்லமுடியாமல் கீழே வடிந்தது, பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது" என்றனர்.


இம்முயற்சி மிகவும் பாராட்டக்கூடியதாய் இருந்தது.

அருவியின் மேலே பம்பார் ஆறு, மிக அகலமாய் குறைவான ஆழத்தில் பாறைகளுக்கிடையே தவழ்ந்து வந்து, திடீரென உண்டாகும் 40 அடி செங்குத்தான பள்ளத்தில் விழுவதினால் உருவாவதே தூவானம் அருவி.



சூரியன் வரும் போது அழகான வானவில்லை அருவியின் முன் இட்டுச்சென்றது. மிகப்பெரிதாய் வானத்தில் தெரியும் வானவில்லை பார்த்த எனக்கு, அருவியின் முன் முப்பது அடி தூரத்தை விட்டமாய் கொண்ட சிறிய வானவில் அதிசயமாக தோன்றியது...!



பொதுவாக, சூரிய ஒளி மழைத்துளிகளில் படும் போது எதிரொலிப்பாகி, நிறப்பிரிகையடைகிறது. அதுவே வானவில்லாக சூரியனுக்கு எதிர்புறத்தில் தோன்றுகிறது.


இங்கு மழைத்துளிகளுக்கு பதில், அருவியின் சாரலில் சூரிய ஒளி படுவதால் இவ்வாறு தெரிகிறது.


நீர் அதிகமாக வரும் போது வலது புறத்தில் பெரிய அருவியாகவும், இடது புறத்தில் இரெண்டு கிளை அருவியாவும் கொட்டுகிறது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பேய் மழையில் நான்கு நாட்களில் அமராவதி அணையை நிறைத்துள்ளது எனில் இதில் சென்ற நீரின் அளவை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சென்றுள்ளது.


அதன் பிறகு அருவி கொட்டும் இடத்திற்கருகே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பாறையின் மேலே அமர்ந்தோம். இன்னும் சில தூரம் உள்ளே செல்லலாம் என எண்ணி நடக்கும் போது, மிகவும் கழிமுகமாக இருந்தது.



பிறகு திரும்பி வந்து ஒரு மரத்தின் இலையை காட்டி, இதை அடுப்பில் போடும் போது உப்பை போன்று பட படவென்று வெடிக்கும் என்றனர். உடனே மரத்தின் சில இலைகளை பறித்து வைத்துக்கொண்டேன். மேலும் வேங்கை மரத்தின் பட்டைகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என கூறினார்.


ஆனால் வேங்கை மரம் பட்டயேதுமின்றி மொழு மொழுவென காட்சியளித்தது. ஆம், அனைத்தும் சுரண்டப்பட்டிருந்தது..!



காலைப்பசி வயிற்றை கிள்ளியபோதுதான் தெரிந்தது நேரம் எட்டைத்தாண்டியது.


பிறகு சென்ற வழியிலே திரும்பி வரும் போது, இரு மரங்கள் பிண்ணிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. இது மரங்களுக்கும் நேசங்கள் உண்டு என்பதை வெளிப்படுத்துமாறு வளர்ந்து கொண்டிருக்கிறது.


அறைக்கு வந்ததும் பறித்த இலைகளை அடுப்பிலிட்டு சோதனை செய்தேன். உப்பைத் தீலியிலிட்டதை போன்ற வெடிப்பு சத்தம்..! சோதனையில் வெற்றியும் உண்மையும்..!

தயாராய் இருந்த சப்பாத்தி, காய்கறி, பருப்புக்கூட்டு என உண்டுவிட்டு கிளம்புவதற்கு தயாரானோம்.

மீண்டும் ஆற்றைக்கடக்கும் நிகழ்வு வயிற்றில் கலக்கத்தை உண்டு பண்ணியது. ஏனென்றால், நேற்றைக்காட்டிலும் இன்று நீரின் அளவு கூடுதலாகும். ஆகையால் எவ்வாறு கடக்கப்போகிறோம் என அச்சம் தொற்றிக்கொண்டது.



பிறகு அவர்கள் அறையை சுத்தம் செய்யும் பணியில் விரைவாக செயல்பட்டு, 15நிமிடங்களில் அறையை விட்டு கிளம்பினோம்.


தங்கும் விடுதியை சுற்றிய கற்சுவர்கள், விறகடுப்பு, வாசலில் மனதை கவரும் வண்ணமிகு மலர்ச்செடிகள், பக்கவாட்டில், தக்காளி, மிளகாய் செடிகள் என கிராமத்தில் இருப்பதை போன்று காணப்பட்டது. இம்மரவீடானது ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொருமுறை முழுவதும் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் உறுதிக்காக மீண்டும் கட்டப்படுகிறது.


தூவானத்தின் அருவியை விட்டு விடை பெறும் நேரம் வந்தது. ஆற்றில் பக்கவாட்டில் நடந்து வந்து கடக்க தயாரானோம். பெரிதாய் நீரின் அளவு உயர்ந்துவிடவில்லை. நேற்று போல் மெதுவாய் ஒருவர் பின் ஒருவராய் பயமின்றி ஆற்றைக்கடந்தோம். பின்னர் காலணிகளை அணிந்து கொண்டு புகைப்படக்கருவியை மாட்டிக்கொண்டு மெதுவாய் பயணம் ஆரம்பித்தது. நேற்று ஆற்றைக்கடக்கும் போது விஜயின் செருப்பு அடித்துச்செல்லப்பட்டது. அவரும் அதை பிடித்துவிடவேண்டும் என அங்கும் இங்கு வேகமாய் சென்று முயன்றார். பலனின்றி இறுதியாக அடித்துச்செல்லப்பட்டது.


அவரது காலில் பெரிய காயமும் ஏற்கனவே இருந்தது. என்னவென்றுகேட்ட போது, "சில தினங்களுக்கு முன் காட்டு மாடு ஒன்று துரத்திய போது தலை தெறிக்க ஓடி, மரக்கட்டை ஒன்றில் தட்டி விழுந்த போது இவ்வாறானது" என்று கூறினார்.


இந்நிலைமை நமக்கு இப்போது வந்தால் எவ்வாறு ஓடுவது என்ற அச்சமும் உண்டானது. அதற்காகத்தான் அவர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன், காட்டு மாடு, யானைகள் ஏதாவது இருக்கிறதா என கண்டறிந்து அதற்கேற்றவாறு முன்னேறிச்செல்கின்றனர்.


அருவியை விட்டு வெகுதூரம் வந்ததால் அதன் ஓசை மெல்ல குறையத்தொடங்கி ஆற்றின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. சில தூரம் சென்ற பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர், ஒரு வனக்காவலரின் உதவியோடு எதிரே வந்துகொண்டிருந்தனர்.


இவ்வாறான இடங்களை எப்படியாவது கண்டறிந்து வந்துவிடுகிறார்கள் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவர்களை கடந்து சென்றோம்.


நேற்றும் வரும் போது இறக்கமான பாதைகளை இன்று செங்குத்தாக ஏற நேரிட்டது. ஒரு மணி நேர பயணத்திற்கப்பால் நேற்று பட்டாம்பூச்சி பார்த்த இடத்திற்கருகில் பத்துநிமிடம் இளைப்பாறினோம். மீண்டும் செங்குத்தாக பயணம் தொடங்க, இதயத்துடிப்பு அதிகமாகியது.


சில நிமிடங்களில் விஜய் ஒரு மரத்தை காட்டி பறக்கும் பல்லியை காட்டினார்.

மரத்தில் ஆங்காங்கே பறந்து மெதுவாய் மேலே சென்று கொண்டிருந்தது. புகைப்படம் எடுக்கும் சில நொடிப்பொழுதில், மேலே சென்றது. மேலும், பறக்கும் போது இதன் பக்கவாட்டு மெல்லிய சதைப்பகுதி, இறக்கையாக செயல்படுகிறது. இதன் தாடை பகுதியை அடிக்கடி வெளியே நீட்டி முன்னேறிச்சென்றது . இருப்பினும் அதனை என்னால் சரியாய் படம் எடுக்க முடியவில்லை.


அப்போது கண்ணன் "இப்பல்லியை காண பல புகைப்படைக்காரர்கள் வரும் போது, எவ்வளவு தேடினாலும் காண்பது அரிதாய் இருக்கும், இப்போது எதிர்பாராத விதமாக பார்த்திருக்கிறோம், அதிர்ஷ்டம் தான்" என கூறினார்.

அதன் பிறகு கல்லூரி மாணவ மாணவிகள் என ஆறேழுபேர் வனக்காவலரோடு எதிரே வந்துகொண்டிருந்தனர். இப்போதே அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் என கேட்டுக்கொண்டு மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். கண்ணன் மெதுவாக என்னிடம் " இவர்கள் தூவானம் அருவி வரை செல்வது கடினமே; பாதியிலே நடக்க முடியாமல் திரும்பி கூட வந்துவிடுவார்கள்" என கூறினார்.


பிறகு ஆலம்பட்டி அலுவலகத்தை சிறுது நேரத்தில் அடைந்தோம். மணி பதினொன்றை தொட்டது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் உடுமலை பேருந்து உண்டு. ஆனால் மாலை ஐந்து மணிக்கே சென்னைக்கு ரயில் என்பதால் அடுத்த பேருந்தில் செல்லலாம் என சிறுது நேரம் களைப்பாறினோம்.


அரைமணி நேரமாக புளியமரத்தில் நிழலடியில் அமர்ந்து காற்று வாங்கி, நேற்றைய பொழுதை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். இங்கிருந்து பார்க்கும் போது தூங்கும்காடுகளாய் காட்சியளித்து, அதனுள்ளே செல்லும் இத்தனை அற்புதங்களை உள்ளடைக்கியதா ..! என என்னத்தோன்றுகிறது.

திடீரென ஒரு யோசனை...!

தூவானம் அருவியை அதன் அருகில் புகைப்படம் எடுத்தோம். அதை சாலையிலிருந்து பார்க்கும் தூரத்து காட்சியை எடுக்க வேண்டும் என என்னி, ஒரு வனக்காவலரின் மோட்டார்சைக்கிளில் மூணாறு செல்லும் திசையில், இரெண்டு கிலோமீட்டர் சென்றேன். அங்கேயும் சில குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அடர்ந்த வனத்தினுள் கொட்டிக்கொண்டிருக்கும் அருவியை புகைபடமெடுத்தேன்.



நேற்றிரவு அவ்விடத்திலா தங்கினோம் ? என்ற சந்தேகமும் வந்தது. பிறகு ஆலம்பட்டி அலுவலகத்தை அடைந்து உடைகளை மாற்றிவிட்டு, புறப்பட தயாரானோம். அப்போது தேநீர் வாங்கி குடித்துக்கொண்டிருக்க, அவ்வழியே சென்ற மறையூர் மக்கள் இருவர் , கடையை நோக்கி வந்தனர். அவர்களும் தேநீர் சொல்லிவிட்டு எங்களிடம் பேச ஆரம்பித்தனர். எங்களின் நேற்றைய பயணத்தை கூற அவர்களும் வியப்பாய் பாராட்டினர். கூடவே ஏன் நன்னாரி தேனீர் அருந்தாமல் சாதாரண தேநீர் அருந்துகிறீர்கள் என கேட்டனர்.



"தேநீர் எங்கு வேண்டுமானாலும் குடிக்கலாம், இங்கு நன்னாரி கலந்த தேநீர் மிகுந்த சிறப்பு, அதுமட்டுமில்லாமல் உடலுக்கு மிகவும் நல்லதென எடுத்துக்கூறினர். நானும் “நேற்று குடித்தோம்” என்று கூற அவர் “இன்றும் குடிக்க வேண்டுமல்லவா" ? என கூறினார்.


நன்னாரி என்பது படரும் கொடி வகை தாவரம் எனவும், அதன் வேரானது உடலுக்கு குளிச்சியையும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும், குருதியை தூய்மைப்படுத்துவதற்கும், மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் பயன்படுகிறது என்று கூறினார்.


இவ்வளவு பயன்களை உள்ளடக்கியதா என வியப்பில் ஆழ்த்தியது..!

எனக்கு தெரிந்தது நன்னாரி சர்பத் மட்டுமே ...!


அது முழுக்க முழுக்க நன்னாரி வேரை காய்ச்சி, அதனுடன் இனிப்பு மற்றும் நிறமிகள் சேர்த்து விற்கப்படுகிறது.


கூடவே கடையிலிருந்த வனச்சரக அலுவலக பெண்மணியொருவர், சிறிதளவு நன்னாரி வேறை எனக்கு கொடுத்தார். “வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்” என்று மறையூர்க்காரர் கூற, நானும் வாயிலிட்டு மென்றேன். குளிர்ச்சியும், நன்னாரியின் மணமும் என்னை மயக்கியது..!

இங்கு, நன்னாரி வேறை நன்றாக காய்ச்சி, அதனுடன் கரும்பு சர்க்கரை சேர்த்து தேநீர் தயார் செய்கின்றனர்.


“மூட்டை மூட்டையாய் இவ்வேர்களை எங்கள் வீட்டில் வைத்து, வரும் விருந்தினர்களுக்கு பை நிறைய கொடுத்தனுப்புவோம்” என்று தனது அனுபவங்களை என்னிடம் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.


சிறுது நேரத்தில் பேருந்து வர, அவர்களிடம் விடைபெற்று உடுமலை சென்றோம்.பேருந்தில் எனக்கு இடம் இல்லாததால், நின்று கொண்டே சின்னாறு வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு வந்தேன்.


இரெண்டு நாட்கள் கைபேசி , இணையமின்றி இயற்கையோடு இணைந்திருந்த தருணங்களை எண்ணி, மலை மற்றும் மழை பயணத்தின் முடிவில் இருந்தேன்.


உடுமலை வந்ததும் மதியஉணவு மாலை 4 மணியளவில் சாப்பிட்டுவிட்டு, ரயிலுக்கு காத்திருந்தோம்.


பிறகு ரயிலேறி, பயணத்தின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டு நேரம் கரைந்தது. அந்தி சாயும் வேலையில் கதிரவன் வானின் செய்த வண்ணமாயங்களை பின்னோக்கி பார்த்துக்கொண்டே சென்றேன். ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்த காற்றாலை என்னை மிகவும் கவர்ந்தது.



ரயிலின் வேகத்தில் ஒவ்வொரு காற்றலையும் என்னை வேகமாக கடந்தது. முன்னோக்கி சற்று பார்த்து, அதற்கேற்றவாறு திட்டமிட்டு எடுக்கும் போது நினைத்தமாதிரி அவற்றை சிறப்பாக எடுக்க முடிந்தது. காற்றாலையின் அச்சை பற்றி அதன் இறக்கைகள் சுழலுவதுபோல, எனது நினைவுகளும் சில தினங்களுக்கு தூவானத்தை பற்றியே சுழன்றுகொண்டிருந்தது..


உங்களது எண்ணமும் இதைப்போன்று சுற்றி வர, பருவமழை முடிவில் தூவானத்திற்கு சென்று வாருங்களேன்….!


என்றும் அன்புடன்


ப . சிவலிங்கம்

386 views0 comments
bottom of page